Friday, February 29, 2008

டிக்கெட்










'வரவேண்டாம்' என
என்னை நீ பணித்த
சில நிமிடங்களுக்கு முன் தான்
டிக்கெட் உயிர் பெற்றது.

தனதுடலில் அச்சிடப்பட்டிருந்த
திகதியையும் நேரத்தையும்
ஒருதரம்
உரக்கச் சொன்னது

தனது
பயணம் பற்றிய அவசியம் குறித்தும்
புலன்களின்
வேட்கை பற்றியும்
அது ஓயாமல்
பிதற்றத் தொடங்கியது

நமது பிரிவை
தனது மெளிந்த மேனியால்
இணைக்க முடியும் எனவும்
உன்னுள் உடைந்த
சில பகுதிகளை
ஒட்ட முடியும் எனவும்
அது தீர்க்கமாக சொன்னது

நான் உன்னூரில் நடக்கும்
மூன்று அதிசயம் பற்றி கூறினேன்:

1.வண்ணத்துப்பூச்சி மீண்டும் கூட்டுப்புழுவாவது பற்றி
2.மலர்கள் மீண்டும் மொட்டாவது பற்றி
3.ஓர் அன்பு சிதைவது பற்றி

டிக்கெட் சிரித்தபடி
தான் உயிர் பெற்றதை விட
அவை பெரிதில்லை
என்றது.

No comments: